X

டெல்லி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

புதுடெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இன்று வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என பலர் தங்கள் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்திற்குள் இன்று பிற்பகல் திடீரென புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாதாவான ஜிதேந்தர் கோகி மற்றும் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

ஜிதேந்தர் கோகியை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தபோது சுட்டுக் கொன்றுள்ளனர். ஜிதேந்தரின் எதிரிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.