டோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்

ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கேப்டன் டோனியின் பயிற்சி முறை, தயாரான விதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் முழு உடல்தகுதியுடனும், மனரீதியாக மிகவும் வலுவுடனும் இருக்கிறார். புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார். அணியில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் எங்களது பயிற்சி சிறப்பாக தொடங்கவில்லை. இருப்பினும் அமைதியுடன் செயல்பட்டு நிலைமையை நன்றாக சமாளித்து இருக்கிறோம்.

எப்போதுமே தொடரின் முதல் ஆட்டம் பதற்றமும், பரபரப்பும் நிறைந்ததாக இருக்கும். அதுவும் சென்னை-மும்பை ஆட்டம் என்றால் நெருக்கடி அதிகமாகிவிடும். ஆனால் அதை அனுபவித்து, ரசித்து விளையாடுவோம்.

இந்த ஐ.பி.எல். போட்டியை வித்தியாசமான வியூகங்களுடன் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. உள்ளூர் மைதானத்திற்குரிய சாதகமான விஷயங்கள் என்று எதுவும் இந்த முறை இருக்காது. எல்லாமே வெளியூர் மைதானங்களில் நடக்கும் ஆட்டங்கள் போன்று தான் இருக்கும். 3 மைதானங்களிலும் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு தக்கபடி சரியான கலவையில் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது முக்கியம். இதுதான் ஒவ்வொரு அணிகளுக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.

இவ்வாறு பிளமிங் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools