தமிழகத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி சட்டம் இயற்றப்பட்டது – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிட்டார். விலங்குகளுக்கு தேவையற்ற வதை, வலியை தடுக்கும் அதே விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில், அவசியமான வலியும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதி சுமக்கும் விலங்குகளை சுட்டிக் காட்டி வாதங்களை அவர் முன் வைத்தார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:

விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய சட்டபேரவை, நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு, விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டபேரவைக்கு அதிகாரமுண்டு. விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலும் தடுக்க முடியாது. தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாச்சாரம் உள்ளது. பிரியாணிக்காக விலங்குகளை பலியிடுவது கலாச்சாரமாகும். அசைவ பிரியர்களை கறி சாப்பிட கூடாது என விலக்கு வதை தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools