X

தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலை, 7 கட்டங்களாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும்படி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் சென்னை வந்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று அவர்கள் ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளிடமும் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், பாபு முருகவேல், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்பி, இளங்கோ, தேமுதிக சார்பில் சந்திரன், பாஜக சார்பில் திருமலைசாமி, காங்கிரஸ் சார்பில் தாமோதரன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags: south news