X

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நான் நடிக்கவில்லை – பூஜா குமார் விளக்கம்

கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இப்படத்திலும் நடிப்பார் என்றும், ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ள நடிகை பூஜா குமார், “தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. யாருக்கு தெரியும், நடிக்க அழைப்பு வந்தாலும் வரலாம் என கூறியுள்ளார்.

பூஜா குமார் ஏற்கனவே விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.