தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை, முதன்முறையாக இந்தியா வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், பலம் வாய்ந்த இந்தோனேசிய அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், கோப்பை வென்ற இந்திய அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனையை போற்றும் வகையில் விதிகளை தளர்த்தி பரிசு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றிக்காக இந்திய அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

வீரர்களுக்கான தொடர் பயிற்சி மற்றும் ஆதரவு வழங்குவதன் மூலம் அணி இந்த சாதனை வெற்றியை பதிவு செய்திருப்பதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools