திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் கர்நாடக போலீசார் சோதனை

தி.மு.க முன்னாள் அமைச்சரும், சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிசாமி கோவை பீளமேட்டில் வசித்து வருகிறார். இவரது பெயரில், கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு கற்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இவர் நடத்தி வரும் கல்குவாரிகள், அரசின் விதியை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கல்குவாரி உரிமையாளரான பொங்கலூர் பழனிசாமியின் வீட்டில் சோதனை நடத்த கர்நாடக மாநில போலீசார் முடிவு செய்தனர்.இதற்காக அவர்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கோர்ட்டு சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து கர்நாடக மாநில போலீசார் 15 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை கோர்ட்டு ஆர்டருடன் கோவைக்கு வந்தனர்.

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா வீதியில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்று, கோர்ட்டு ஆர்டரை காண்பித்து விட்டு சோதனை மேற்கொண்டனர். அவரது வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்தனர்.

இந்த வீட்டில் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி வசித்து வருகிறார். இவர் தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இதேபோல் பீளமேட்டில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

கோவை தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news