திமுக முப்பெரும் விழாவால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை – அண்ணாமலை அறிக்கை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவையில் வரும் 15-ந்தேதி (அதாவது நாளை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். கல்வியிலும், தொழில் துறையிலும் கோலோச்சிய கோவை, தி.மு.க. ஆட்சியில் செயலிழந்து இருக்கிறது.
கடந்த 30 வருடங்களாக, மறைந்த கருணாநிதி காலத்தில் இருந்து, தி.மு.க.வின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற வரி மட்டும் தவறாமல் இடம்பெறும்.

ஆனால், திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன. ஆனால் தி.மு.க.வுக்கு அவை குறித்து கவலை இல்லை. தி.மு.க. அரசின் மின்கட்டண உயர்வால், விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கி இருக்கிறது. கோவை மாநகருக்கு உடனடி தேவை, சாலை வசதிகளும், தண்ணீர்ப் பஞ்சத்துக்கான தீர்வுகளும்தான். அதுபோக, மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.

இதில் முப்பெரும் விழா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து, கோவையை மேலும் குப்பைக் கிடங்காக ஆக்குவதுதான் இந்த விழாவின் விளைவாக இருக்கப் போகிறது. உண்மையிலேயே தி.மு.க.வுக்கு, கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கோவை மக்களின் அறுபது ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். கோவை பகுதி நீர்நிலைகளை சீரமைத்து, தண்ணீர் பஞ்சத்தை தடுத்திருக்க வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள கம்யூனிஸ்டு அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுத்திருக்க வேண்டும்.

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு, தமிழக பா.ஜனதா சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், பத்தில் ஒரு பங்கை தி.மு.க. அரசு நிறைவேற்ற முன்வந்தாலே, கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும். ஆனால், அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools