திருப்பதியில் அத்திவரதர்! – குஷியில் பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் அத்திவரதர், இந்திய அளவில் பெருமாள் பக்தர்களை கவர்ந்ததையடுத்து, தற்போது திருப்பதியிலும் அத்திரவரதர் சிலை வைக்கப்பட்டிருப்பது, அனைத்து பெருமாள் பக்தர்களையும் குஷியாக்கியுள்ளது.

புரட்டாசி மாசத்தில் ஆண்டுதோறும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவ விழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி திருமலை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமான மின் விளக்குகளும் ஆங்காங்கே பொருத்தப்பட்டு முழு திருமலையும் பூலோக வைகுண்டம் போல காட்சியளிக்கிறது.

பிரமோற்சவ விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சார்த்துகிறார்.. 9 நாட்கள் நடைபெறும் விழாவின் போது, இரு வேளைகளில் நான்கு மாட வீதிகள் வழியாக பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்வான கருட சேவை அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறுது. இதில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு, இந்த முறை திருமலையில் முதல்முறையாக அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருப்பது பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிரமோற்சவ விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், திருமலையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news