திருப்பதியில் தற்போதைக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதியில்லை – தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவகர்ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் துணை கோவில்களுக்கு திரளான பக்தர்கள் நன்கொடையாக விவசாய நிலங்களை வழங்கியுள்ளனர்.

இந்த நிலங்களில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதத்தில், குத்தகைக்கு விட்டு இதில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை தேவஸ்தானமே விலைக்கு வாங்கி இதனை ஏழுமலையானின் நைவேத்தியத்திற்கு உபயோகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் துணை கோவில்களான அப்பலயகுண்டா பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சீனிவாசமங்காபுரம் சீனிவாசபெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.

துணை கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பசுக்களை பராமரிக்க கோசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு பால் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தேவைப்படாமல் புதிய கட்டிடங்கள் கட்டக்கூடாது. திருப்பதி தேவஸ்தான துணை கோவில்களில் பக்தர்களின் வருகையை அதிகரிக்க ஆந்திர சுற்றுலா கழகம் மற்றும் பஸ் போக்குவரத்து கழகங்கள் மூலம் சுற்றுலா பேக்கேஜ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தற்போதைக்கு இலவச தரிசனம் தொடங்குவது குறித்து திட்டம் எதுவும் இல்லை என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools