திருப்பதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது தொற்று பரவல் கணிசமாக குறைந்து விட்டதால் பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தனம் படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது.

இதேபோன்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசன சலுகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தையுடன் வரும் பெற்றோர் ஆகியோர் சிறப்பு தரிசனம் மூலம் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக சலுகைகள் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஏப்ரல் 1-ந்தேதியிலிருந்து திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரையும், சனிக்கிழமையும் காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினந்தோறும் 1000 பக்தர்கள் இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர் .

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools