திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குராற்பனமும் மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்குகிறது.

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஒரு வயது உட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் இலவச தரிசனத்திற்கு நேரம் குறையும்.

ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம். வரும் 19-ந்தேதி ஆகம விதிகளின்படி 30 நிமிடங்கள் முன்பாக 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதியில் இருந்து வேலூருக்கு 85 சிறப்பு பஸ்களும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 35 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் வருகையை பொறுத்து சென்னையில் இருந்து திருப்பதிக்கு 85 முதல் 90 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதே போல சேலம், கோவை, திருச்சி, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். வரும் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கள் வருகிற 24-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதியில் நேற்று 65,937 பேர் தரிசனம் செய்தனர். 24,101 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news