திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவை டிகெட்டுகள் இணையத்தில் வெளியானது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. வரும் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள தேவஸ்தானம் இன்று காலை 10 மணி முதல் 20-ந் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது.

அதன்படி முன்பதிவு செய்து கொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடு க்கப்பட்டு அவர்களது செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலமாக அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை தேவஸ்தானத்திற்கு செலுத்தினால் போதும். பின்னர் இதற்கான டிக்கெட் பக்தர்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரமோற்சவம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்கர தீப அலங்கார சேவை போன்றவற்றில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் மாதம் இலவசமாக அங்கப் பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் வரும் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நாளில் காலை 11 மணிக்கு ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம். மதியம் 3 மணிக்கு ஆன்லைன் மூலம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதே நாளில் மதியம் 3 மணிக்கு பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். http://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பக்தர்கள் அனைத்து சேவைகளையும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools