X

திருப்பதி கோவில் வளாகத்தில் மூங்கிள் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை

திருப்பதி மலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கபட்டுள்ளது. அதற்கு பதிலாக ஸ்டீல் பாட்டில்களை விற்பனை செய்தனர். மேலும் பிரசாத லட்டுக்கள் கொடுக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சணல் பைகள் மூலம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்டீல் பாட்டில்கள் ரூ.300, 400-க்கு விற்பனை செய்தனர். சாதாரண பக்தர்கள் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதிபட்டனர். இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அளித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி ஒரிசா மாநிலத்தில் இருந்து மூங்கில்கள் வரவழைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் மூங்கிலை வெட்டி எடுத்து அழகிய வடிவில் குடிநீர் பாட்டில்களாக தயார் செய்துள்ளனர். இவை ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூங்கிலால் செய்யப்பட்ட பாட்டில்களில் உள்ள குடிநீர் புதிய சுவையுடன் உள்ளது. இதனால் இந்த குடிநீர் பாட்டில்களுக்கு பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

திருப்பதியில் நேற்று 64,707 பேர் தரிசனம் செய்தனர். 28,676 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச தரினத்தில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.