‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட குழுவை சேர்ந்தவருக்கு மிரட்டல் – போலீசில் புகார்

நாடு முழுவதும் கடந்த 5-ந் தேதி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானது. கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மூளை சலவை செய்து வெளிநாட்டுக்கு கடத்தி சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக இந்த படத்தின் கதை சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. என்றாலும் எதிர்ப்பை மீறி நாடு முழுவதும் இந்த படம் திரையிடப்பட்டது.

தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. இதுபோல கேரளாவிலும் 30-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. படம் வெளியான 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த படத்திற்கு மேற்கு வங்காளம் தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்தது. இதுபற்றி படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் மும்பை போலீசில் புகார் கொடுத்தார். அதில் படக்குழுவை சேர்ந்தவருக்கு டெலிபோன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. வீட்டை விட்டு தனியாக வெளியே வந்தால் மீண்டும் வீடு போய் சேரமுடியாது என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மிரட்டல் வந்த நபருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools