‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆதரவு – கேரளாவில் பரபரப்பு

கேரள மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்ற சில இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து விட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த தகவலின் அடிப்படையில் இயக்குனர் சுதிப்தோசென் ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தை எடுத்தார். இதில் கேரளாவில் இருந்து இந்து, கிறிஸ்தவ பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டு, அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதற்கு கேரளா, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என சில அமைப்புகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். என்றாலும் எதிர்ப்பை மீறி கடந்த 5-ந் தேதி இந்த படம் நாடு முழுவதும் வெளியானது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை எனப்படும் கே.சி.பி.சி.யின் செய்தி தொடர்பாளர் பாதிரியார் ஜேக்கப் பாலக்கப்பிள்ளி கூறியதாவது:-

‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தை திரைக்கதை எழுதியவரின் கலையாகவே பார்க்க வேண்டும். இந்த படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும், அவர்களின் அமைப்பும் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்தி உள்ளது. எனவே இதனை வகுப்பு வாதத்தின் அடிப்படையில் மதிப்பிட முடியாது.

கேரளாவில் காதல் வலையில் பெண்களை சிக்க வைத்து அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்ட உண்மையை மறுக்க முடியாது. ஆனால் காதல் திருமணத்திற்கு பிறகு கட்டாய மதமாற்றம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆதரவு அளித்திருப்பது கேரளா வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools