துணை ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் கடந்த ஜூலை 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. செஸ் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று சென்னைக்கு வந்த அவர், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் டெல்லி சென்றுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் இன்று காலை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். குடியரசு துணைத்தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools