தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. கடந்த ஒருவாரமாக சில இடங்களில் மட்டும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்கிறது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வருகிற 20-ந் தேதி பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news