X

தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது என்பது பகல் கனவு! – தம்பிதுரை

பாராளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என்பது பகல் கனவு. அவர்கள் கனவில் கூட தமிழகத்தை ஆள முடியாது என கூறினார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வருவார் என்பதில் அ.தி.மு.க. முக்கிய பங்காற்றும். மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபொழுது அவதிப்பட்டார். அவருக்கு கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உரிய உதவிகளை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, மேகதாது உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் திராவிட கட்சிகள் தான் காரணம் என்றும், இதுகுறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா? என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தம்பிதுரை, மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளித்தது யார்? என்னுடன் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா? என்று பதில் சவால் விடுத்துள்ளார்.