தேர்தலில் போட்டியிட போவதில்லை! – ரஜினிகாந்த் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்து மக்கள் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் ரீதியாக விமர்சனமும் செய்து வந்தார்.

அரசியல் ஈடுபாடு காரணமாக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார்.

அடிக்கடி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால் முறைப்படி கட்சி தொடங்காமல் தாமதித்து வந்தார்.

அரசியல் ஈடுபாட்டுடன் புதியதாக சினிமா படங்களையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் ரஜினிகாந்த் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை, சட்டசபை தேர்தலே இலக்கு என்று கூறி உள்ளார்.

ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools