தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ்குமார், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு வசதியாக 6 தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள 6 சீர்திருத்தங்களில் முதன்மையானது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளையோ, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பது தான்.

குரேஷி உள்ளிட்ட ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பலரும் கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளனர். எனவே, கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கும் 6 சீர் திருத்தங்களையும் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools