தேர்தல் பத்திரம் வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு தேவையில்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தேர்தல் பத்திரம் என்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமென்றாலும் நிதி வழங்கலாம். ஆனால் யார் எந்த கட்சிக்கு நிதி வழங்கினார், எவ்வளவு நிதி வழங்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை வாக்காளர்களால் பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளிப்படைத்தன்மையை வாக்களர்களுக்கு தெரிவிக்கும் உரிமையை மீறுவதாக இந்த திட்டம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்தது. அத்துடன் வங்கி உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் விவரங்களை பதிவிட வேண்டும் என உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில் அது தொடர்பாக வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பெரிய பெரிய நிறுவனங்கள் கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கியுள்ளன. அதற்கு அரசியல் கட்சிகள் அந்த நிறுவனங்களுக்கு ஏதாவது கைமாறாக செய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் அந்த குழுவால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் “நாங்கள் விவரங்களை வெளியிட உத்தரவிட்டிருந்தோம். நாங்கள் விசாரணையில் ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்த திட்டத்தை ரத்து செய்துள்ளோம். தற்போது சிறப்பு விசாரணைக் குழு என்ன விசாரிக்கப் போகிறது. சட்டத்தீர்வுகள் இருக்கும்போது நாம் சிறப்பு விசாரணைக்குழுவை நியமிக்கலாமா?.

இதில் தலையிடுவது நீதிமன்றத்திற்கு இது முன்கூட்டியே மற்றும் பொருத்தமற்றதாக இருக்கும். ஏனெனில் சட்டம் மூலம் கிடைக்கக்கூடிய தீர்வுகள் தோல்வியடைந்த பிறகு தலையீடு தொடர வேண்டும். இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools