தேவையில்லாதா ஷாட் அடித்த ரிஷப் பண்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரோகித் சர்மா – வைரலாகும் வீடியோ

ஆசிய கோப்பையில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. துபாயில் நடந்த ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. முன்னாள் கேப்டன் விராட் கோலி 44 பந்தில் 60 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 16 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), லோகேஷ் ராகுல் 20 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஷதாப் கான் 2 விக்கெட்டும், நசிம் ஷா முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ரஜப், முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் 182 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 51 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), முகமது நவாஸ் 20 பந்தில் 42 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிஷ்னோய், ஹர்திக் பாண்ட்யா, யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மீது கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக கோபம் அடைந்தார். அவர் 12 பந்தில் 14 ரன் (2 பவுண்டரி) எடுத்தார். அவர் தேவையில்லாமல் மோசமான ஷாட் அடித்து ஆட்டம் இழந்தார்.

ரிவர்ஸ் சுவிப் ஆடி ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் ஆடுகளத்தில் இருந்து வந்த அவர் மீது ரோகித் சர்மா கடுமையாக கோபம் அடைந்தார். வீரர்கள் அறைக்கு வந்த அவரிடம் இந்த மாதிரியான ஷாட்டை விளையாடியது ஏன்? என்று கேட்டு ரிஷப் பண்டிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதற்கு ரிஷப் பண்ட் அந்த மாதிரியான ஷாட்டை ஆட வேண்டியதன் அவசியம் குறித்து வாதிட்டார். இருவரும் விவாதம் செய்யும் வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

11 பேர் கொண்ட அணியில் ரிஷப்பண்ட் இடம் ஏற்கனவே கேள்வியாகி வருகிறது. அந்த இடத்துக்கான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். இதே போல நேற்றைய போட்டியின் போது அர்ஷ்தீப் கேட்சை தவற விட்ட போது ரோகித் சர்மா கோபத்துடன் எரிச்சல் அடைந்தார். ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இலங்கையை நாளை எதிர் கொள்கிறது. இறுதி போட்டிக்கு நுழைய வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools