நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகமாக பெண்களை போட்டியிட வைக்க வேண்டும் – மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் தி.மு.க. மூத்த தலைவர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். தி.மு.க. மகளிர் அணியில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அதிக அளவில் இடங்கள் ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.

கூட்டணி கட்சிகளுடன் தங்கள் பகுதியில் உள்ள வார்டு இட ஒதுக்கீடு பணிகளை சுமூகமாக பேசி விரைவில் முடிக்க வேண்டும். தோழமைக் கட்சிகளுடன் இந்த பங்கீடுகள் அனைத்தும் அமைதியான முறையில் நடந்து முடிய வேண்டும்.

எவ்வளவு விரைவில் இட பங்கீடு செய்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் அறிவிப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். அதன் பிறகு உடனடியாக தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 8 மாதங்களாக தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தி.மு.க. செய்துள்ள முக்கிய பணிகளையும், சாதனைகளையும் மக்கள் மத்தியில் தெளிவாக பட்டியலிட்டு எடுத்துச் சொல்லி தி.மு.க.வினர் ஆதரவு திரட்ட வேண்டும்.

அரசின் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு தி.மு.க.வினர் சொல்ல வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools