நாடு முழுவதும் யாத்திரை நடத்த பா.ஜ.க திட்டம்

பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் நன்றி தெரிவித்து யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த யாத்திரையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார்.
இந்த யாத்திரையை அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் மக்களை சந்திக்கும் யாத்திரையாக நடத்தி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல முடிவு செய்து உள்ளார்கள்.

முக்கியமாக இந்த தேர்தலில் காங்கிரஸ், வித்தியாசமான தேர்தல் அணுகுமுறையை கையாண்டது. அப்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள். மனு தர்ம சட்டங்களை கொண்டு வருவார்கள் என்று ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

இந்த பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபட்டது. அவர்களை நம்பவும் வைத்தது. எனவே, பா.ஜ.க. யாத்திரையை மாவட்டம், தொகுதி, மண்டல அளவில் நடத்தவும் யாத்திரையின் போது எதிர்க்கட்சிகள் செய்த ஒவ்வொரு தவறான பிரசாரத்துக்கும் சரியான விளக்கம் அளித்து மக்களிடம் தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் நட்டா கூறி இருக்கிறார்.

அடுத்த சில நாட்களில் யாத்திரை பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்சி மேலிடம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools