நீட் தேர்வு மையங்களை மாற்ற கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபதி செய்தது

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கவும், அதுவரை முதுநிலை ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரி தமிழகத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 9 டாக்டர்கள் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா ஆஜராகி, கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுவரும் டாக்டர்கள் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப முதுநிலை மருத்துவ ‘நீட்’ தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக கேரளத்தில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு கேரளத்திலே தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். அதுவரை முதுநிலை மருத்துவ ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க தேசிய கல்வி வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்பொழுது சூழல் மாறியுள்ளது. விமான போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை. கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பரவல் குறைய தொடங்கியுள்ளது.

பயணம் செய்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, பேறுகாலத்தை நெருங்கிய 2 டாக்டர்களுக்கு மட்டும் முதுநிலை மருத்துவ ‘நீட்’ தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டது. இதுபோன்ற வாய்ப்பு பிற டாக்டர்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools