நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வழிமுறை முதலமைச்சருக்கு தெரியவில்லை – ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

தேனி மாவட்டம் போடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 505 வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என தி.மு.க. தெரிவித்தது. ஆனால் தற்போது வரை பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க.வால் நிறைவேற்ற முடியவில்லை.

குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் எனது முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்காகதான் இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது வீட்டில் இருந்து கொண்டு கையெழுத்து போட்டு வருகிறார்.

தேர்தல் பிரசாரத்துக்கு கூட வராமல் காணொளி மூலம் பிரசாரம் செய்கிறார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வழிமுறை அவருக்கு தெரியவில்லை.

விவசாயிகளுக்கு 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக கூறி விட்டு 50 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நான் தொகுதிக்கு என்ன செய்தேன்? என்று அமைச்சர் இ.பெரியசாமி கேட்கிறார். நான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன். பொய்யான வாக்குறுதிகளை அளித்ததில் மக்கள் தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர். எப்போதும் அ.தி.மு.க. கொடுப்பவர்கள். தி.மு.க. மக்களிடம் இருப்பதை எடுப்பவர்கள்.

10 மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒரு முன்னேற்றம் கூட தமிழகத்தில் ஏற்படவில்லை. யாருடைய ஆட்சிய நல்லாட்சி என்பதை மக்கள் எடைபோட்டு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools