நெல்லை நித்திய கல்யாணி அம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு

நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த ராதாபுரத்தில் வரகுணபாண்டீஸ்வரர்-நித்திய கல்யாணி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம், ஊரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவது வழக்கம்.

விழாவின்போது 9-ம் நாளன்று தேரோட்டமும், 10-ம் திருவிழா அன்று தெப்ப தேரோட்டமும் நடைபெறும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விழாவின்போது திருமணமாகாத இளம் பெண்கள், வாலிபர்கள் அம்பாளுக்கு மஞ்சளை காணிக்கையாக வழங்கும்போது அவர்களுக்கு திருமண தடை நீங்கிவிடும் என்பது ஐதீகம். ராதாபுரத்தை சுற்றி உள்ள அனைத்து கிராம மக்களும் தங்கள் வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளை இந்த கோவிலுக்கு மஞ்சள் வாங்கி கொடுத்த பின்னரே தொடங்குவர். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பழமையான கோவிலுக்கு பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு நேற்று முன்தினம் இரவு வந்தார்.

அனைத்து பக்தர்களை போலவே, அவரும் அம்பாளுக்கு மஞ்சள் வாங்கி வந்தார். அவர் வந்திருப்பதை தெரிந்து கொண்ட ஊர் பெரியவர்கள் வருகிற 9-ந்தேதி ராதாபுரம் தெற்கு தெருவில் அமைந்துள்ள பெரிய கோயில் புலிமாடசாமி கோவில் கொடை விழாவிற்கு வரும்படி யோகிபாபுவுக்கு அழைப்பிதழ் வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட யோகிபாபு நிச்சயம் வருவதாக உறுதிகொடுத்தார் தொடர்ந்து அவர் ஒரு கிலோ மஞ்சளை அம்பாள் பாதத்திலும், ஒரு கிலோ மஞ்சளை இடித்து காணிக்கையாகயும் கொடுத்தார்.

கால பைரவர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த அவர், ஊருக்கு அருகில் உள்ள விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலுக்கு சென்றும் வழிபட்டார். அவரை பார்த்தவர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools