X

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு சலுகை! – அரசு அறிவிப்பு

ஓய்வூதியத் திட்டம், சம்பள முரண்பாடு ஆகியவை தொடர்பாக உள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று அவர்களது போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ளது.

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து போராட்டத்தை ஒடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுவோம் என்று அறிவித்தனர். பிரச்சனைகளை தீர்க்கும் வரை எந்தவித பாதிப்பையும் எதிர்கொள்ள தயார் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை இன்று மதியம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. அதன்படி உடனடியாக பணிக்கு திரும்புவோர்களுக்கு அவர்கள் விரும்பும் ஊருக்கு பணியிட மாற்றம் செய்து தரப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீண்ட நாட்களாக பணியிட மாற்றம் கேட்டு வரும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: south news