பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்பனை – விலை ஏற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளியின் சில்லறை விற்பனை விலை ரூ.60/- வரை உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்யும் பொருட்டு கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.) சிந்தாமணி, நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய கூட்டுறவு பண்டக சாலைகளால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் வழியாக குறைவான விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி தற்போது ரூ.40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொது மக்கள் இதை வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools