பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் அதிகரிக்கும் கள்ள நோட்டு புழக்கம்

கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, கள்ள நோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகும் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியிருப்பதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் மொத்தம் ரூ.245 கோடியே 33 லட்சம் முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன. அதிகபட்சமாக, 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின. 2017-ம் ஆண்டு ரூ.55 கோடி மதிப்புள்ள நோட்டுகளும், 2021-ம் ஆண்டு ரூ.20 கோடியே 39 லட்சம் மதிப்பு நோட்டுகளும், 2016-ம் ஆண்டு ரூ.15 கோடியே 92 லட்சம் மதிப்பு நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதுபோல், ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கைப்படி, 2021-2022 நிதிஆண்டில், வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை இருமடங்காக, அதாவது 79 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.

2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 604 ஆகும். இது, முந்தைய நிதிஆண்டை விட 54 சதவீதம் அதிகம். அனைத்து மதிப்புள்ள கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.

இது, முந்தைய நிதிஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரமாக இருந்தது. 2019-2020 நிதிஆண்டில், 2 லட்சத்து 96 ஆயிரத்து 695 கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ரூ.10, ரூ.20, ரூ.200, ரூ.500, ரூ.2,000 என பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools