பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் இளம் வீரர்கள் மேம்பட வேண்டும் – ஷிகர் தவன் பேட்டி

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று, 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 306/7 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர்கள் பின் ஆலன் 22 (25), டிவோன் கான்வே 24 (42) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து டேரில் மிட்செலும் 11 (16) சொதப்பினார்.

இறுதியில் கேன் வில்லியம்சன், டாம் லதாம் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இதனால், நியூசிலாந்து அணி 47.1 ஓவர்கள் முடிவில் முடிவில் 309/3 ரன்களை சேர்த்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. டாம் லதாம் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 145 ரன்களும், கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 94 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தார்கள்.

இப்போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு ஷிகர் தவன் பேட்டிகொடுத்தார். அதில், ”பேட்டிங்கில் சிறப்பாகத்தான் செயல்பட்டோம். பந்துவீச்சிலும் முதல் 10-15 ஓவர்களில் அபாரமாக செயல்பட்டு நெருக்கடியை ஏற்படுத்தினோம். ஆனால், அடுத்து சரியாக செயல்படவில்லை. ஷார்ட் பால்களை தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தோம். லதாம் அதனை சிறப்பாக அட்டாக் செய்தார். குறிப்பாக (ஷர்தூல் தாகூர் வீசிய) 40ஆவது ஓவரில் போட்டி அப்படியே நியூசிலாந்து பக்கம் சாய ஆரம்பித்தது.

40ஆவது ஓவரில் ஷர்தூல் தாகூர் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசியதால், டாம் லதாம் அதனை சிறப்பாக எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசினார். இதனால், அந்த ஓவரில் 25 ரன்கள் கசிந்தது. அணியில் இருக்கும் அனைவரும் இளம் வீரர்கள். பந்துவீச்சு, பீல்டிங் இரண்டையும் மேம்படுத்தியே ஆக வேண்டும். திட்டங்களை சரியாக செயல்படுத்தாததும் தோல்விக்கு ஒரு காரணம். அடுத்த போட்டிகளில் இந்த குறைகளை சரிசெய்து, பலமிக்க அணியாக களமிறங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு தவான் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools