பயிற்சி போட்டி இல்லாதது எங்களுக்கு பாதகமே – புஜாரா கவலை

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் விராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ‌ஷர்துல் தாகூர், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணி விவரம் வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே, ரி‌ஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, முகமது ‌ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், விர்த்திமான் சஹா, உமேஷ் யாதவ், விகாரி.

இந்தநிலையில் உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடாதது பாதகமே என்று இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு இங்கிலாந்துடன் 2 போட்டியில் விளையாடி உள்ளது. இதனால் அந்த அணி இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலையை நன்கு அறிந்து இருப்பார்கள். அவர்கள் எல்லாவகையிலும் தயாராக உள்ளார்கள். அதேநேரத்தில் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஆடுவது பாதகமே.

ஆனாலும் நாங்கள் நியூசிலாந்து அணியை எல்லா வகையிலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதற்காக நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். எங்கள் அணியின் பந்து வீச்சு வலுவானதாக இருக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி, ஒருநாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டம் ஆகியவற்றை போலவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் மிகப்பெரியதாகும்.

இவ்வாறு புஜாரா கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools