பரவும் தக்காளி காய்ச்சல் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

கேரளாவில் பரவிய தக்காளி காய்ச்சல் நோய், கர்நாடகா, தமிழகம், அரியானா, ஒடிசா மாநிலங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது பெரும்பாலும் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள பெரியவர்கள் ஆகியோரை பாதிக்கிறது.

காய்ச்சல், உடலில் அரிப்பு, தடிப்புகள், மூட்டுகளில் வலி, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகள். இதற்கு சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க அறிகுறி தோன்றியதிலிருந்து ஐந்து முதல் 7 நாட்களுக்குப் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த வைரஸ் குரங்கு அம்மை, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல. சுகாதாரத்தை கடைப்பிடித்தல், சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துதல் ஆகியவை சிறந்த தடுப்பு முறை ஆகும்.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools