பாதுகாப்பு நடைமுறைகளை வீரர்கள் பின்பற்ற வேண்டும் – விராட் கோலி அட்வைஸ்

ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி அணியின் ‘யூடியூப்’ நிகழ்ச்சியில் பேசுகையில், ‘கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் நமக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு களம் காண இருக்கிறோம். ஐ.பி.எல். போட்டி சிறப்பாக நடைபெற நாம் அனைவரும் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் மதித்து செயல்பட வேண்டும்.

நாம் இங்கு ஜாலிக்காகவோ, ஊர் சுற்றிப் பார்க்கவோ வரவில்லை என்பதை உணர்ந்து எல்லோரும் நடக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது நிலவும் கடினமான சூழ்நிலையையும், நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் சலுகைகளையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தேவையில்லாத செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஐ.பி.எல். போட்டி நடக்கும் என்று நீங்கள் நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டீர்கள். பயிற்சி செய்யும் போது எத்தனை நாள் கழித்து இதில் ஈடுபடுகிறோம் என்பதை உணர முடிந்தது.

பதற்றத்துடன் தான் பயிற்சிக்கு சென்றேன். நான் நினைத்தது போல் அந்த அளவுக்கு ஆட்டத்தை தவறவிடவில்லை. ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்லமாட்டேன். அதேநேரத்தில் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடிய அனுபவம் இருப்பதால் போட்டி தொடங்கியதும் விரைவில் இந்த பிரச்சினை குறைந்து விடும்’ என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools