பாராலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை நழுவவிட்ட மாரியப்பன்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 5-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது.

கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார். இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

பாராலிம்பிக் தொடக்க விழா இன்று மாலை நடக்கிறது. இதில் தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தேசிய கொடியை அவர் ஏந்தி செல்லவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் அவர் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் அதில் இருந்து விலகி உள்ளார்.

மாரியப்பனுக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டெக்சந்த் தேசிய கொடியை ஏந்திச் சென்றார். மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools