பாராளுமன்ற தொகுதி வாரியாக பூத்கமிட்டிகளை ஆய்வு செய்யும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப்பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும். இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். வருகிற 21-ந்தேதி திண்டுக்கல், தேனி, அடுத்த மாதம் 1-ந்தேதி திருவள்ளூர், 8-ந்தேதி தென்காசி, விருதுநகர், 14-ந்தேதி கன்னியாகுமரி, 28-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது.

காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news