X

பிங் படத்தை அஜித் எதற்கு ரீமேக் செய்ய விரும்பினார் – இயக்குநர் வினோத் விளக்கம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டிரெய்லர் நேற்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அஜித் இந்த படத்துக்குள் வந்தது பற்றி எச்.வினோத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘சதுரங்க வேட்டை’ ரிலீசுக்கு பிறகு எதிர்மறை வேடத்தில் அஜித்துக்காக ஒரு கதை தயார் பண்ணி இருந்தேன். அஜித்தோ ‘நெகட்டிவ் கேரக்டர் பண்ணின வரை போதும்.

இனி நான் பண்ற படங்கள் மூலமா மக்களுக்கு நம்பிக்கையையும் கனவையும்தான் விதைக்கணும் என்று நினைக்கிறேன்’னு சொன்னவர், ‘எனக்கு ஒரு படம் பிடிச்சிருக்கு. அதை நீங்க ரீமேக் பண்ணினா நல்லா இருக்கும்’னு சொன்னார்.

‘என்ன படம் சார்’னு கேட்டேன். ‘பிங்க்’னு சொன்னார்.‘ உடனடியா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் தயங்கினேன்.

அஜித்தே தொடர்ந்து பேசினார். ‘பெண்களுக்கு எதிராக நடக்கும் வி‌ஷயங்கள் அதிர்ச்சியை தருது. பெண்களைப் பற்றிய புரிதல்ல நம்ம சமூகம் ரொம்ப பலவீனமா இருக்கு. எனக்கேகூட என்மேல வருத்தம் இருக்கு. ஆரம்பகாலத்தில நானும் பெண்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிற படங்களில் நடிச்சிருக்கேன். நான் பண்ணின தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன். இதுதான் என் அடுத்த படம். நீங்க இருந்தீங்கனா சந்தோ‌ஷம்’னு சொன்னார்.

மறுபடியும் அஜித் சாரைச் சந்திச்சப்போ, ‘இந்தப் படத்தை ஒரு பெண் இயக்குநர் பண்ணினா நல்லா இருக்கும் சார்’னு சொன்னேன். ‘தப்பு சார். ஒரு பெண், அவங்களுக்கு சாதகமா பேசுறாங்கன்னு மக்கள் ஈசியா எடுத்துக்குவாங்க. இது பெண்களுக்கான படம் கிடையாது. பசங்களுக்கான படம்’. இவ்வாறு அவர் கூறினார்.