பிரதமர் மோடியின் மனதின் குரல் 100 வது நிகழ்ச்சி – பத்திரிகை விநியோகம் செய்து அழைப்பு விடுக்கும் பா.ஜ.க தொண்டர்கள்

பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் வானொலி மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பொது மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது பல தரப்பு மக்களின் சாதனைகள் அந்தந்த ஊர்களின் சிறப்பு குறித்தும், வளர்ச்சிகள், சுகாதாரம், வழிகாட்டுதல்கள், சமுதாய பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோர் குறித்தும் வாழ்க்கை பாதையில் எவ்வாறு முன்னெடுத்து செல்ல வேண்டும் என உரையாற்றி வருகிறார்.

இது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியானது வருகிற 30- ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நாடுமுழுவதும் நடக்கிறது. இதையொட்டி சென்னையில் முன்னேற் பாடாக பல பணிகள் நடைபெறுகிறது.

பொதுமக்கள் அதிகம் பங்கேற்கவும், மேலும் நடுத்தர, அடித்தட்டு மக்கள் பெருமளவில் பங்கேற்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியான நடுக்குப்பத்தில் பொதுமக்களை அழைப்பதற்கு வித்தியாசமான முறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமண பத்திரிக்கை போன்று மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அடிக்கப்பட்டு தாம்பூல தட்டில் வெற்றியை பாக்கு, பழம் இனிப்புடன் மேள தாளம் முழங்க வீடு வீடாக சென்று நிகழ்ச்சியில் தவறாமல் பங்கு கொள்ளும்படி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாரதிய ஜனதா மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:-

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி அனைத்தும் மக்களிடையேயும் செல்ல வேண்டும். நடுக்குப்பத்தில் மீனவர்கள் அதிகம் வாழ்வதால் வருகிற ஞாயிறு அன்று நடைபெறும் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்புகிறோம். இதில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடைய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் எல்லோரிடமும் போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர் பாரம்பரிய முறையில் அழைப்பு விடுத்துள்ளோம்.

இவ்வாறு தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools