X

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து! – கற்களை போட்டு நிறுத்திய பயணிகள்

பழனியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் உடுமலைப்பேட்டை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பிரேக் செயல் இழந்தது. டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றபோதும் முடியவில்லை. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தறிக்கெட்டு சென்றது. இதை பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர்.

மேலும் சிலர் ஓடும் பஸ்சிலேயே கீழே குதித்து இறங்கினர். பின்னர் சாலையோரம் இருந்த கற்களை எடுத்து பஸ் முன் பக்க டயரில் போட்டு நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் இதேபோல் பிரேக் பிடிக்காத அரசு பஸ் வத்தலக்குண்டு சாலையில் பொதுமக்களால் கல்லைப்போட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோன்ற சம்பவம் பழனியிலும் நடந்தது. தரமற்ற அரசு பஸ்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.

பகல் நேரத்தில் நடந்ததால் பயணிகள் பஸ்சை தடுத்து நிறுத்தி பெரும் உயிரிழப்பை தடுத்து விட்டனர். இதே சம்பவம் இரவு நேரத்தில் நடந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

எனவே தரமான அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: south news