பிளாஸ்டிக் பொருட்கள் தடை எதிரொலி! – வாடிக்கையாளர்களுக்கு சில்வர் பாத்திரம் கொடுத்த பால் வியாபாரி

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு நேற்று முதல் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு, வணிகர்கள் மாற்று வழியை கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒரு பால் வியாபாரி, பாலித்தீன் பைகளை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பாத்திரங்களை வழங்குகிறார்.

வேடசந்தூர் அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் தனபால் (வயது 39). பால் வியாபாரி. இதற்காக வேடசந்தூர்-வடமதுரை சாலையில் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருசிலர் பாத்திரம் கொண்டு வருவது இல்லை.

மேலும் பாலித்தீன் பைகளில் பால் வாங்கி செல்வோரும் உண்டு. இதற்கிடையே தமிழக அரசு பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்தது. இதனால் தனபால் தனது வாடிக்கையாளர்களுக்கு பாலித்தீன் பைகளை வழங்குவதை நிறுத்தினார். அதேநேரம் வழக்கத்தை மாற்றி திடீரென பால் வாங்குவதற்கு பாத்திரம் கொண்டு வரும்படி வற்புறுத்தினால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்து விடுவார்கள் என தனபால் நினைத்தார்.

மேலும் பாலித்தீன் பையை பயன்படுத்துவதை தவிர்ப்பதில் உறுதியாக இருந்தார். எனவே, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சில்வர் பாத்திரம் வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று பால் வாங்க வந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சில்வர் பாத்திரங்களை (தூக்குவாளி) வழங்கினார். அதில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பாலின் அளவுக்கு ஏற்ப சில்வர் பாத்திரங்களை வழங்கி அசத்தினார்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பாத்திரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news