புவனேஷ்வர் குமார் வேகத்தையும், துல்லியமான பந்துவீச்சையும் இழந்துவிட்டார் – சுனில் கவாஸ்கர் கருத்து

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்த தொடர்தான் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதேசமயம் 60 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.

3-வது போட்டியில் அவருக்கு பதில் களமிறங்கிய தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் பேட் செய்து 54 ரன்களையும் அடித்தார். இந்நிலையில் புவனேஷ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

புவனேஷ்வர் குமார் தனது வேகத்தையும், துல்லியமான பந்துவீச்சையும் இழந்துவிட்டார். அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவர் மீண்டும் ஆரம்ப கட்ட பயிற்சியை தொடங்கி, மெல்ல தன்னை மேம்படுத்தினால் மட்டுமே பழைய நிலைக்கு திரும்ப முடியும். அப்படி செய்தால் மட்டுமே, உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடிக்க முடியும்.
அதுவரை  தீபக் சஹாரை பயன்படுத்தலாம். தீபக் சஹாரால் இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்ய முடியும். பேட்டிங்கிலும் உதவக் கூடியவர். இதுவரை 2 அரை சதங்களை விளாசியுள்ளார்.

தீபக் சஹார் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால், அவரையே வழக்கமான வீரராக சேர்த்துக்கொள்ளலாம். புவனேஷ்வர் குமார் சிறப்பாகத்தான் செயல்பட்டிருக்கிறார். இருப்பினும், நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவெடுத்துத்தானே ஆக வேண்டும்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools