X

பெங்களூரில் தனியார் பேருந்து, ஆட்டோக்கள் ஓடவில்லை – மக்கள் பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் தனியார் வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பஸ்-ஆட்டோக்கள் உள்பட சுமார் 7 லட்சம் வாகனங்கள் ஓடவில்லை. கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டமான ‘சக்தி’ உள்பட 5 உத்தரவாத திட்டங்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் உத்தரவாத திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘சக்தி’ திட்டத்தை மாநில அரசு தொடங்கியது. அன்றைய தினம் முதல் பெண்கள் அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.

கர்நாடக அரசின் இந்த சக்தி திட்டத்தால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘சக்தி’ திட்டத்தை தனியாா் பஸ்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், ஆட்டோ டிரைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும், அமைப்புசாரா போக்குவரத்து மேம்பாட்டு வாரியம் உருவாக்க வேண்டும், சர்வதேச விமான நிலையத்தில் இந்திரா உணவகம் திறக்க வேண்டும், மின்சார ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், வாழ்நாள் வரியை தவணை முறையில் பெற வேண்டும்.

வீட்டு வசதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் பஸ்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், தனியார் பஸ்களை அரசே வாடகைக்கு பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக தனியார் பஸ், ஆட்டோ, வாடகைகார்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து போக்குவரத்து மந்திரி ராமலிங்க ரெட்டி சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை ஏற்பது குறித்து அரசு தரப்பில் சரியான உறுதிமொழி அளிக்கப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டப்படி இன்று முழு அடைப்பு நடைபெறும் என்று அந்த சங்கத்தினர் தெரிவித்தனர்.

அதன்படி இன்று திட்டமிட்டப்படி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த முழு அடைப்புக்கு 32 தனியார் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகைகார்கள், தனியார் பள்ளிக்கு வாடகைக்கு இயக்கும் வாகனங்கள் இயங்கவில்லை.

பெங்களூருவில் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்கள் ஓடாததால், அதை நம்பி பயணிக்கும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளையில் வாடகைகார்களையும் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கான டாக்சிகள் விமான நிலையத்திற்கு இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திற்கு செல்பவர்கள் அந்த கார்களை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்த கார்கள் சேவையை நிறுத்தியதால் விமான நிலையம் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வாகனங்களை இயக்கி வரும் டிரைவர்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முழு அடைப்பால் 7 லட்சம் வாகனங்கள் பெங்களூருவில் ஓட வில்லை.

இந்த முழு அடைப்பு நேற்று நள்ளிரவு 12 மணி முதலே தொடங்கியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்கள் பெங்களூருவில் இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளன. ஆனால் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஒருவேளை அவர்கள் ஊர்வலம் நடத்தினால் அவர்களை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளது. இந்த முழு அடைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பெங்களூரு நகரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: tamil news