பெண்கள் கிரிக்கெட் – கடைசி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வென்று 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. மழை காரணமாக 47 ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் இங்கிலாந்து அணி 219 ரன்களில் ஆல் அவுட்டானது.

அந்த அணியில் அதிகபட்சமாக நடாலிசீவர் 49 ரன்னும், கேப்டன் ஹீதர் நைட் 46  ரன்னும், வின்பீல்டு ஹில் 36 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 29 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 49 ரன்னில் வெளியேறி அரை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அடுத்து இறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 75 ரன்கள் எடுத்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், இந்தியா 46.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது கேப்டன் மிதாலி ராஜுக்கு அளிக்கப்பட்டது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools