பெண் குழந்தைகள் பாதுகாப்பு! – தமிழக அரசுக்கு இரண்டு விருதுகள்

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் டெல்லியில் நடைபெற்றது.

இதில் மத்திய அரசின் திட்டமான ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்‘ என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோல், மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் விருது வழங்கப்பட்டது.

விருதுகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி வழங்கினார். அவரிடம் இருந்து தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், குழந்தை பருவத்தில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியவரும், தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வாளருமான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மேலும் சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி, திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கிறிஸ்டினா டி.டார்த்தி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news