X

பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவருக்கு நூதன முறையில் தண்டணை

கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி தொடங்கிய முதல் நாளில் பஸ்சில் ரகளை செய்தபடி மாணவர்கள் சென்றனர்.

ஐ.சி.எப். பகுதியில் இருந்து பச்சையப்பன் கல்லூரிக்கு சென்ற பஸ்சில் மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

இது தொடர்பாக துரை ராஜ் என்ற மாணவர் உள்பட சிலர் மீது அயனாவரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொள்வது உள்ளிட்ட 2 சட்டப்பிரிவின் கீழ் மாணவர் துரைராஜ் மீது வழக்கு போடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர் துரைராஜ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், நான் புதுப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படித்து வருவதாகவும், ஆனால் நான் பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருவதாக போலீசார் தவறாக வழக்கு போட்டுள்ளனர் என்றும் முறையிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரான மாணவர் துரைராஜ் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.

இருப்பினும் அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துரைராஜ் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் மாணவருக்கு நூதன தண்டனை விதிக்கப்பட்டது. தான் படிக்கும் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர் துரைராஜ் 10 மரக்கன்றுகளை நட்டு அதற்கு ஒரு மாதம் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். தனது இந்த பணி தொடர்பாக தினமும் கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Tags: south news