பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டன் அரசு ஒப்புதல்

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணிகளில் பல்வேறு நிறுவனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. அஸ்ட்ரா ஜெனேகா, நோவாவேக்ஸ், சனோபி ஜிஎஸ்கே, பைசர் பயோன்டெக் ஆகிய நிறுவனங்களின் மருந்துகளும் நல்ல பலனை அளிப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த மருந்துகளை கொள்முதல் செய்வதற்காக பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்நிலையில், பிரிட்டனில் பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

பைசர் பயோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் ஆகும். பைசர் பயோன்டெக் மருந்து 95 சதவீத செயல்திறன் கொண்டது என இறுதிக்கட்ட பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, பிரிட்டன் அரசு இந்த மருந்தின் 4 கோடி டோஸ்களை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools