X

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்த கார்த்தி!

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படத்தைத் தொடங்க முயற்சித்தார். ஆனால், பட்ஜெட் ஒத்து வராததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளை விஜய் சேதுபதியால் கொடுக்க முடியவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறார். புகழ் பெற்ற கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.