ப்ளங்கெட் பந்தை சேதப்படுத்தவில்லை – கிரிக்கெட் வாரியம் விளக்கம்

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 373 ரன்கள் குவித்தது. பின்னர் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் பகர் ஜமான் சதம் விளாசியதால் பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இறுதியில் 361 ரன்கள் குவித்து 12 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ப்ளங்கெட் பந்தை விரல் நகத்தால் சுரண்டியது போன்ற வீடியோ வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் போட்டிக்கான அதிகாரிகள் வீடியோவை ஆய்வு செய்தனர். அப்போது ப்ளங்கெட் தவறு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ப்ளங்கெட் பந்தை சேதப்படுத்தும் விதமான எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை. பந்தை சேதப்படுத்தினாரா? என்பதை ஓவர்-பை-ஓவராக போட்டிக்கான அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். பின்னர் அவ்வாறு செய்யவில்லை என்பது உறுதி செய்தனர்’’ என்று பதிவிட்டுள்ளது.

இதனால் ப்ளங்கெட் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news