மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலத்தின் பணி 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் – மத்திய அமைச்சர் தகவல்

சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது என்றும் அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது என்றும் சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5800 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையில் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டத்திற்கான இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 20.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள இந்த பாலம் 4 பகுதிகளாக கட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் 2024-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும் என்றும், அதேபோல். காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools